உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
18 வெள்ளி

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் வீழ்ச்சி!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
26 பார்வைகள்

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் (VIAL) தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிஹே தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, இலகு ரக வாகனங்களின் விலை குறைந்தது 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், வாகனங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு தற்போதைய சந்தை நிலைமை சாதகமான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், வாகனங்களை முன்பதிவு செய்ய இது ஏற்ற காலமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், சந்தை விலைகள் மேலும் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் பெரும்பாலான வர்த்தகர்கள் தற்போது வாகனங்களை நஷ்டத்திற்கே விற்பனை செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

சந்தை நிலவரத்தைப் பொறுத்து வாகனங்களின் விலை குறையும் போக்கு தொடரக்கூடும் எனத் தெரிவித்த அவர், சந்தை நிலைபெற்ற பின்னர் விலைகள் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நாட்டில் அதிகளவில் பயன்படுத்தப்படும் டொயோட்டா யாரிஸ், டொயோட்டா ரைஸ், ஹோண்டா வெசல், சுஸுகி வேகன் ஆர், டைகாட்சு மீரா மற்றும் சுஸுகி வேன் உள்ளிட்ட பல வாகன மொடல்களின் விலைகள் 4 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிலோன் மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் (CMTA) அண்மையில் வெளியிட்ட கருத்துக்களையும் இந்திக சம்பத் மெரெஞ்சிஹே நிராகரித்துள்ளார்.

பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்வோர் வரி விதிப்பு நடைமுறையில் காணப்படும் குறைபாட்டை பயன்படுத்தி வருவதால், 2026ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் 100 பில்லியன் முதல் 120 பில்லியன் ரூபாய் வரையிலான வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என CMTA முன்னதாக தெரிவித்திருந்தது.

2025ஆம் ஆண்டில் அரசாங்கம் சுமார் 40 பில்லியன் ரூபாய் வருவாயை இழந்துள்ளதாகவும், 2026ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் மேலும் 54 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் CMTA தெரிவித்திருந்தது.

எனினும், இந்த வருவாய் இழப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மெரெஞ்சிஹே, அரசாங்க வருவாயில் ஏற்பட்டதாகக் கூறப்படும் இழப்புக்கு புத்தம் புதிய வாகனங்களின் இறக்குமதியே காரணம் எனத் தெரிவித்துள்ளார்.

2016ஆம் ஆண்டின் வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளைச் சுட்டிக்காட்டிய அவர், புத்தம் புதிய வாகனங்களின் இறக்குமதி அரசாங்க வருவாயை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் விளக்கியுள்ளார்.

மேலும், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த ஐந்து ஆண்டு காலக் கட்டுப்பாட்டினால் ஏற்பட்ட வாகனப் பற்றாக்குறை தற்போது பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சந்தையில் எஞ்சியுள்ள தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இன்னும் அதிகளவிலான வாகனங்கள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்தையின் உண்மையான தேவையை விட அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டமையே தற்போதைய விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் எனக் குறிப்பிட்ட மெரெஞ்சிஹே, அரசாங்கம் விதித்துள்ள கூடுதல் கட்டணமும் அண்மைய விலை சரிவுக்கு பங்களித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சவுதியில் அனுஜனுக்கு எதிரான வழக்கு: இலங்கை அரசு தீவிர கண்காணிப்பு

சவுதி அரேபியாவில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள இலங்கைச் பிரஜையான அனுஜன் சிவராசாவின் வழக்கை தாம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா…

19 0 0
இலங்கை செய்திகள்

வேலணை பிரதான வீதிகளில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார பாதிப்பு – மக்கள் பெரும் கவலை!

வேலணையின் பிரதான வீதியோரங்களில் இனந்தெரியாத நபர்களால் தொடர்ச்சியாக வீசப்படும் வீட்டுக் கழிவுகள் மற்றும் திண்மக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதுடன், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பல்வேறு…

26 0 0
இலங்கை செய்திகள்

தொடருந்து பொது முகாமையாளருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தொடருந்து பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரியவுக்கு எதிராக இன்று (18) கையூட்டல் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தினால் குறித்த முறைப்பாடு…

25 0 0
இலங்கை செய்திகள்

விமல் வீரவன்சவின் கருத்துத் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில், நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விசாரணை நடத்தி…

28 0 0