சுவீடன் பொதுத்தேர்தலில் இடதுசாரி எதிர்க்கட்சிக் கூட்டணி சிறிய வித்தியாசத்தில் வெற்றி
சுவீடன் நாட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இடதுசாரி எதிர்க்கட்சித் கூட்டணி சிறிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, தான் பதவியிலிருந்து விலகப் போவதாக நாட்டின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்ட்சன் (Ulf Kristersson) அறிவித்துள்ளார்.
குறிப்பாக, சோசலிச இடது கட்சி மற்றும் தாராளவாத மையக் கட்சி (Centre Party) ஆகியவற்றுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை அவர் சரிசெய்ய வேண்டிவரும்.
நேற்று (17) நிறைவடைந்த வாக்கு எண்ணிக்கையின் படி, ஸ்டொக்ஹோமில் உள்ள 349 இடங்களைக் கொண்ட ரிக்சடாக் (Riksdag) நாடாளுமன்றத்துக்காக, நான்கு இடதுசாரி எதிர்க்கட்சிகள் இணைந்து 176 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.
தற்போதைய பழமைவாத கூட்டணி கட்சிகள் 173 இடங்களைப் பெற்றன.
இதன் மூலம் இடதுசாரி அணி, வெறும் மூன்று இடங்கள் வித்தியாசத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
10.6 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில், இரு தரப்பினருக்கும் இடையே வெறும் 50,000 வாக்குகள் மட்டுமே வித்தியாசமாக இருந்தது.
இந்தநிலையில், தேர்தல் முடிவுகள் வெளியானவுடன், பிரதமர் உல்ஃப் கிறிஸ்ட்சன் தனது பதவியில் இருந்து விலகப்போவதாக சமூக வலைத்தளமான எக்ஸ் (X) பக்கத்தில் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் மக்டலேனா அண்டர்சன் (Magdalena Andersson) தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி (Social Democrats) மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
இது, 2022 இல் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் அவரது நம்பிக்கையை இந்த முடிவு வலுப்படுத்தினாலும், இடதுசாரி அணியில் காணப்படும் சித்தாந்த வேறுபாடுகள் காரணமாக அரசாங்கத்தை அமைப்பதில் சிக்கலான பணியை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இடதுசாரி கட்சி அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது, ஆனால் மையக் கட்சியோ இடதுசாரிக் கட்சி இடம்பெறும் அரசாங்கத்தை எதிர்ப்பதாகக் கூறியுள்ளது.
மறுபுறம், 2010 இல் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்த குடியேற்ற எதிர்ப்பு கட்சியான ‘சுவீடன் டெமாக்ராட்ஸ்’ (Sweden Democrats), இந்த முறை 17.5 சதவீத வாக்குகளை மாத்திரமே பெற்று, வரலாற்றில் முதன்முறையாக தனது ஆதரவை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.