செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம்.!
யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 34ஆவது நாள் அகழ்வு நேற்று நடைபெற்றது. இதன்போது புதிதாக 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அவை சுத்தம் செய்யப்பட்டு இலக்கமிடப்பட்டன.
அத்துடன், ஒரு சிறு குழந்தையின் என்புத் தொகுதி மற்றும் குழந்தைகளின் 3 என்புத் தொகுதிகள் உட்பட மொத்தம் 7 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டிலிருந்து இதுவரை மொத்தமாக 420 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 416 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அகழ்வுப் பணிகளின் போது கண்டெடுக்கப்படும் சான்றுப் பொருட்களும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று வெள்ளை நிறத்திலான பாசி மணி ஒன்று அடையாளம் காணப்பட்டு, அது 130ஆவது சான்றுப் பொருளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

