தமிழ் பேசும் கட்சிகளின் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை!
“தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில், தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியால் எதிர்க்கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பணிமனையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரச்சினைகள், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாததால் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கல்கள் மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடவே இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் மற்றும் பி. திகாம்பரம் ஆகியோரின் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இணைந்துள்ளனர். இது எதிர்க்கட்சிக்கோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணிக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இந்த விடயம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், அவர் எப்போதும் இம்மக்களின் பிரச்சினைகளில் மிகுந்த அவதானத்துடன் இருந்து வருகின்றார்.” – என்றார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், இந்தச் சம்பவத்தில் 31 பேர் உயிரிழந்தமைக்கு அரசின் மெத்தனமே காரணம் என்று குற்றம் சாட்டினார்.
“முதல் நாளிலேயே மோதலில் ஈடுபட்டவர்களைத் தனிமைப்படுத்தியிருந்தால், இரண்டாம் நாள் ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தவிர்த்திருக்கலாம்.
சிறைச்சாலை நெருக்கடியைக் கையாளத் தவறிய நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உடனடியாகப் பதவி விலக வேண்டும். அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க அரசு எடுக்கும் முயற்சி நீதித்துறைக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும், பிற துறைசார் பற்றாக்குறைகளைத் தீர்க்காமல் ஒரு துறைக்கு மட்டும் சலுகை வழங்குவது ஏனைய துறையினரிடையே அதிருப்தியைத் தோற்றுவிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாதாள உலகக் குழுக்களிடம் பணம் பெற்று வருகின்றார் என்று ஆளுங்கட்சி பிரதி அமைச்சர் ஒருவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டை முஜிபுர் ரஹ்மான் முற்றாக நிராகரித்தார்.
“இது ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டு. தைரியமிருந்தால் நாடாளுமன்றத்துக்கு வெளியே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யட்டும்” என்றும் அவர் சவால் விடுத்தார்.
புதிய அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி, பழைய அரசுகளின் அதே அரசியல் பாணியையே பின்பற்றுகின்றது என்றும் அவர் மேலும் விமர்சித்தார்.