உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
13 ஞாயிறு

சுமந்திரன், சிவஞானத்தை பதவி விலகக் கோரும் தொகுதிக் கிளை.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
424 பார்வைகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரை உடனடியாக பதவி விலகுமாறு கோரிக்கை விடுத்து காங்கேசன்துறைத் தொகுதிக் கிளை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அக் கடிதத்தில் தமிழரசுக் கட்சியின் விதிமுறைகளை மீறிய பல செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவையாவன,

  1. 2025 மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது வலி. வடக்கு பிரதேச சபைக்கு வேட்பு மனு சமர்ப்பித்தலில் முறைகேடுகள்.

2025 மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தங்கள் தலைமையில் நடைபெற்ற வேட்பு மனு தாக்கலின் போது ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பு மனு படிவங்களை பயன்படுத்தி சில வேட்பாளர்களை ஏமாற்றியும் போலிக் கையொப்பமிட்டும் வலி. வடக்கு பிரதேச சபைக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக உங்கள் வழிகாட்டலிலும் மற்றும் உங்கள் கையொப்பத்திலும் தேர்தல் திணைக்களத்திற்கு சமர்ப்பித்தமை சம்பந்தமாக தங்களுடன் பலமுறை நேரடியாக சந்தித்து முறைப்பாடு செய்தும் மற்றும் கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்ககையும் எடுக்கப்படவில்லை என்பது மிகுந்த மனவேதனைக்குரிய விடயமாகும்.

  1. 21.10.2025 அன்று காங்கேசன்துறை தொகுதிக் கிளைக்கு எதிராக போட்டிக் கிளை அமைக்கப்பட்டமை தொடர்பான முறைகேடுகள்.

2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி தேர்தலில் வலி. வடக்கு பிரதேச சபைக்கான வேட்பு மனு முறைகேடுகளை தங்களுக்கு அறிக்கையிட்டிருந்தோம். வலி. வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் தெரிவிலுள்ள முறைகேடுகளை தங்களுக்கு நேரடியாகவும் கடிதம் மூலம் தெரியப்படுத்தியும் எந்தவித வெளிப்படையான விசாரணையோ அல்லது நடவடிக்கையோ எடுக்காமல் முறைகேடுகளை வெளிப்படுத்தியவர்களையும் நியாயம் கேட்ட நபர்களையும் ஒதுக்கி கட்சியின் விதிமுறைகளை மீறி காங்கேசன்துறைத் தொகுதிக் கிளைக்கு எதிராக 21.10.2025 அன்று போட்டிக் கிளை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது. இது காங்கேசன்துறைத் தொகுதிக் கிளை அங்கத்தவர்கள் மீது உளவியல் ரீதியான தாக்குதலை நடாத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முனைப்பாகும் எனக் கருதுகின்றோம்.

  1. புதிய யாழ்ப்பாண மாவட்ட கிளை அமைக்கப்பட்டதில் முறைகேடுகள்.

31.05.2026 அன்று யாழ்ப்பாண மாவட்ட கிளைத் தெரிவுக் கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டம் நடாத்தப்படுவது தொடர்பாக காங்கேசன்துறைத் தொகுதிக் கிளை உறுப்பினர்களுக்கு எந்தவித அறிவித்தலும் வழங்கப்படவில்லை. இத்தகைய தொடர் முறைகேடுகள் காரணமாக கட்சியின் விதிமுறைகளை மீண்டும் மீண்டும் மீறிய செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இச் செயற்பாடுகள் கட்சியின் யாழ். மாவட்ட தொகுதிக் கிளைகள் சார்ந்த அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இனத்தின் விடுதலைக்காக அர்ப்பணிப்புடனும் தியாக மனப்பான்மையுடனும் நேர்மையாகவும் பக்கச்சார்பின்றியும் உழைத்த தலைவர்களான தந்தை செல்வா, வன்னியசிங்கம், இ.எம்.வி.நாகநாதன் ஆகியோர் உருவாக்கிய இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்களாகவும் மற்றும் பொதுச் செயலாளர்களாகவும் இராஜவரோதயம், இராசமாணிக்கம், அமிர்தலிங்கம், கதிரவேல்பிள்ளை ஆலாலசுந்தரம், தங்கத்துரை. நீலன்திருச்செல்வம் போன்ற உன்னதமான தலைவர்கள் அமர்ந்த பதவிகளில் தாங்கள் அமர்ந்து கொண்டு சர்வாதிகாரப்போக்குடனும் சுயநலத்துடனும் வெளிப்படைத்தன்மையற்றும் நடந்து மாபெரும் ஜனநாயக கட்சியான தமிழரசுக் கட்சியை அழிவின் விளிம்புக்கு கொண்டு சென்றுள்ளீர்கள் என்பது உறுதி.

தங்களின் இந்த வகிபாகத்தின் மூலம் தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியாக இருக்கும் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிகளை வகிக்கும் தகுதியினை தாமாகவே இழந்தவர்களாக தங்களை கருதவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.

இக்காரணங்களுக்காக பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச்செயலாளர் பதவிகளிலிருந்து உடனடியாக இராஜினமா செய்யுமாறு காங்கேசன்துறைத் தொகுதிக்கிளை சார்பாக கோரிக்கை விடுக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வர் கைது.!

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரை மூன்று டிங்கி படகுகளுடன் கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் கட்டைக்காடு கடல் மற்றும்…

60 0 0
இலங்கை செய்திகள்

ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு விழா.!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 3 ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரியில், 2025ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் ஏற்பாட்டில், தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும்…

46 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.!

கிளிநொச்சி அக்கராயன்குளம் பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு ஒவ்வொரு குழந்தைகளுக்கும் எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்வு பேரணியும் சிறுவர் பாதுகாப்பு நிகழ்வும்…

45 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றின் மீது கவிழ்ந்த பாரவூர்தி.!

பதுளை – மஹியங்கனை வீதியில், மடித்தலை பகுதியில் வீடு ஒன்றின் மீது பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் வீட்டில் இருந்த தந்தை அவரது மகன் மற்றும்…

38 0 0