தந்தையைக் கொ*லை செய்த குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் கடற்படைச் சிப்பாய் கைது!
அம்பாந்தோட்டை, தங்காலை, சியம்பலாகொட பகுதியில் வீடொன்றின் முன்னால் முதியவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் மகனான ஓய்வுபெற்ற கடற்படைச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தங்காலை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
பெலியத்த, சியம்பலாகொட, திகங்வல பகுதியைச் சேர்ந்த கங்கானம் ஆரச்சிகே தனபால (வயது 88) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர், தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு 8 மணியளவில் வீட்டின் முன்னாலுள்ள தண்ணீர்க் குழாய்க்கு அருகில் அவர் இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மீட்கப்பட்ட சடலத்தில் பல வெட்டுக்காயங்கள் காணப்படுவதால், அவர் கூர்மையான ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் இளைய மகனான 48 வயதுடைய நபரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது அவர் கடும் மதுபோதையில் இருந்தார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விசாரணைகளின்படி, மேற்படி சந்தேகநபர் நேற்றுமுன்தினம் காலை 11 மணியளவில் தந்தையின் வீட்டிற்குச் சென்றிருந்தமை தெரியவந்துள்ளது.
தங்காலை கோட்ட தடயவியல் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று தடயங்களைச் சேகரித்துள்ளனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தங்காலை தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.