இன்றைய நெருக்கடியை நாம் உருவாக்கவில்லை!முந்தைய ஆட்சியாளர்களின் பலவீனமே காரணம்! சபையில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டு.!
தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசால் உருவாக்கப்பட்டதல்ல என்பதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர் என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், அரசின் நிலைப்பாட்டை விளக்கினார்.அவர் மேலும் கூறியதாவது:
ஜனாதிபதி தலைமையிலான அரசு நாட்டின் நிர்வாகத்தைச் சீரான முறையில் முன்னெடுத்து வருகின்றது என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்பும் ஒரு குறைந்த எண்ணிக்கையிலானவர்களைத் தவிர, பொதுமக்கள் நாட்டின் உண்மையான நிலையைப் புரிந்துள்ளனர்.
நாட்டில் நிலவும் இந்நெருக்கடி ஒரு விசேட சூழ்நிலையாகும். எரிபொருளைச் சேமித்து வைப்பதற்கான போதிய வசதிகள் கடந்த காலங்களில் முறையாக உருவாக்கப்படாததே இன்றைய பிரச்சினைக்குக் காரணம் என ஜனாதிபதி புள்ளிவிவரங்களுடன் விளக்கியுள்ளார். முன்னைய ஆட்சிகளின் பலவீனங்களே இந்நிலைக்கு வழிவகுத்துள்ளன.
தற்போதைய நெருக்கடியை மக்கள் மீதான அழுத்தம் குறையும் வகையில் அரசு பொறுப்புடன் நிர்வகித்து வருகிறது. தேவையற்ற பதற்றத்தை மக்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.தற்போது கியூ.ஆர். குறியீட்டு முறைமையின் மூலம் எரிபொருள் விநியோகம் நடைபெற்று வருவதால், எரிபொருளை பதுக்கி வைக்காமல் அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.
எதிர்காலத்தில் இத்தகைய சிக்கல்கள் உருவாகாத வகையில் தேவையான அனைத்துநடவடிக்கைகளையும் அரசு முன்னெடுத்து வருகின்றது என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதியளித்தார்.