எரிபொருள் நெருக்கடி: பாடசாலைகளில் விசேட மாற்றங்கள் அறிவிப்பு.!
நாட்டில் நிலவும் கடும் எரிபொருள் நெருக்கடியை முன்னிட்டு, பாடசாலைகளின் செயற்பாடுகளில் பாரிய மாற்றங்களை மேற்கொண்டு கல்வி அமைச்சு விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது.கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவுறுத்தல்கள் இன்று முதல் அமுலுக்கு வருகின்றன.
அதன்படி, ஏற்கனவே திட்டமிடப்பட்ட மற்றும் இனி திட்டமிடப்படவுள்ள அனைத்து கல்விச் சுற்றுலாக்களும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.மேலும், பாடசாலை விழாக்கள் அல்லது கொண்டாட்டங்களின் போது அதிக எரிபொருள் பயன்படுத்தும் வாகனப் பேரணிகளுக்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாடத்திட்டங்களை நிறைவு செய்யும் நோக்கில், பாடசாலை நேரத்தை வெளி நிகழ்வுகளுக்காக பயன்படுத்த வேண்டாம் என அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசின் தீர்மானத்துக்கு அமைவாக, ஒவ்வொரு புதன்கிழமையும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பாடசாலைகள் இயங்கும்.இந்நிலையில், புதன்கிழமைகளில் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே சுயகற்றலில் ஈடுபடுவதை உறுதி செய்யுமாறும், அதற்கான வழிகாட்டுதல்களை வழங்குமாறும் அதிபர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எரிசக்தி சேமிப்பை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடைமுறைகள், நாட்டின் நிலைமை சீரடைந்த பின் மீளாய்வு செய்யப்படும்என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.