நெருக்கடி சமாளிக்க அரசு தீவிரம்: அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கம்.!
நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலையைச் சீர்செய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது என்று வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசாங்கம் எடுக்கும் கடினமான தீர்மானங்கள் அனைத்தும் விரிவான ஆய்வுகளின் பின்னரே மேற்கொள்ளப்படுகின்றன என்றும், அவை ஒவ்வொருவரையும் வெவ்வேறு விதமாகப் பாதிக்கக்கூடும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய உலகளாவிய சூழ்நிலை மிகவும் மாற்றமடைந்து வருவதாகவும், குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள் இலங்கைக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் வழங்கும் ஆலோசனைகள் குறித்து கருத்து வெளியிட்ட அவர், வெளிநாட்டு உதாரணங்களை மட்டுமே பின்பற்றாமல், நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு உள்ளூர் அடிப்படையில் தீர்வுகளை கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உலக அரசியல் மற்றும் பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்க தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.