பாரதிதாசனுக்கு ஆதரவாக கனிமொழி எம்.பி-யின் பதிவு
கல்விக்காக இந்த 2026-லும், ஒரு மாணவர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்படுமானால், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிலையை எட்ட நாம் மேற்கொண்ட போராட்டங்களின் நோக்கத்தையே தவெக அரசு சிதைத்து விட்டது என்றுதான் பொருள் என திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், தனக்காக அரசின் கல்வித்தொகை வரவில்லை என கண்ணீருடன் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த விவகாரம் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில்
“மாணவர் பாரதிதாசனுக்கு உறுதியளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகையை வழங்குவதற்கு இவ்வளவு கெடுபிடிகளை தவெக அரசு விதிப்பதற்கான தேவை என்ன?
கல்விக்காக இந்த 2026-லும், ஒரு மாணவர் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்படுமானால், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிலையை எட்ட நாம் மேற்கொண்ட போராட்டங்களின் நோக்கத்தையே இந்த அரசு சிதைத்து விட்டது என்றுதான் பொருள்.
அரசு தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தாலும், ஒரு மாணவரின் கல்விக் கனவு அரசின் பிடிவாதத்திற்குப் பலியாவதை இனியும் அனுமதிக்க முடியாது.
என்றும், தி.மு.கழகமும் தமிழ்நாட்டு மக்களும் பாரதிதாசனின் கல்விக்கு உறுதுணையாக நிற்கும் என்றும் அண்ணன் மு.க. ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.