காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்கிறது; வாழ்வாதாரம் கேள்விக்குறி.!
அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் பகுதிகளில் தொடர்ச்சியாக நிலவி வரும் கடும் வறட்சி மற்றும் காட்டு யானைகளின் அட்டகாசம் காரணமாக மக்கள் பெரும் அச்சத்துடனும் பொருளாதார நெருக்கடியுடனும் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, கஞ்சிகுடியாறு பகுதியில் காட்டுயானைகள் மக்கள் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் தொடர்ச்சியாக புகுந்து வருவதால், சேனைப் பயிர்ச்செய்கையாளர்கள், விவசாயிகள் மற்றும் கிராமவாசிகள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
காட்டுயானைகளின் நடமாட்டத்தால் சேனைப் பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு விவசாயப் பயிர்கள் சேதமடைந்து வருவதுடன், விவசாயத்தை பிரதான வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள குடும்பங்கள் கடுமையான பொருளாதார இழப்புகளை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
ஒருபுறம் போதிய மழையின்மையால் விவசாயப் பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் காட்டுயானைகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் தங்களது வாழ்வாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் பகுதிகளில் வறட்சி நிலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவதாகவும், நீர்ப்பற்றாக்குறை காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பிரச்சினைகள் தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளிடம் மனுக்கள் மற்றும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், இதுவரை தங்களுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கஞ்சிகுடியாறு பொது அமைப்பின் ஏற்பாட்டில், அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் வரட்சி மற்றும் காட்டுயானை பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு கோரி மனுவொன்று நேற்று திருக்கோவில் பிரதேச சபை தவிசாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
காட்டுயானைகளின் நடமாட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் உயிரிழப்புகள் உள்ளிட்ட பாரிய அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே, கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் மக்களின் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் கருத்திற்கொண்டு, காட்டுயானை பிரச்சினைக்கு நீண்டகால அடிப்படையிலான நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவதுடன், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான நிவாரண மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு, பாதுகாப்பான வாழ்வுக்கும் விவசாய வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.




