மீண்டும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் குரல் எழுப்பும் முக்கிய அரசியல் பிரதிநிதி.!
18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) உரையாற்றியுள்ளதாக இலங்கையின் முக்கிய அரசியல் தரப்பொன்று தெரிவித்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு சர்வதேச திட்டமிட்ட பெற்றோர் கூட்டமைப்பை (IPPF) பிரதிநிதித்துவப்படுத்தி ஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்கக் குழுக்களுடன் இணைந்து கலந்துகொண்ட நினைவுகளையும், பல தசாப்தங்களாக ஜெனீவாவில் விடுதலைப் புலிகளின் டயஸ்போராவிற்கு எதிராக குரல்கொடுத்து வரும் ரோஷன் மற்றும் பிரையன் ஆகியோருடன் தற்போதைய பேரவைக் கூட்டத் தொடரில் கலந்துகொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இம்முறை மனித உரிமைகள் பேரவையில் நிகழ்த்தப்பட்ட உரையானது நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் ஜனநாயக விவகாரங்களை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது.
குறிப்பாக, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோரை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் அரசியல் பழிவாங்கல்கள் மற்றும் சுரேஷ் சலே உள்ளிட்டோர் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவின் கீழ் முன்னெடுக்கப்படும் கட்டாயத் தடுத்து வைப்புகள் குறித்து இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், அரசாங்கத்தினால் சமூக ஊடகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் அழுத்தங்கள் காரணமாக நாட்டில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஏற்படும் தடைகள் குறித்தும் சர்வதேசத்தின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டில் உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களின் சுகாதார உரிமைகள் குறித்துப் பேசிய நிலையில், இன்று நாட்டின் பிரச்சினைகள் மாறியுள்ளபோதிலும், தான் என்றும் போற்றிப் பாதுகாக்கும் தனிமனித சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற தாராளமய ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் கொள்கைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்றும் இங்கு மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.