மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள பாலங்களின் அவல நிலை.!
மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில், மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும் போது இலுப்பைக்கடவை பகுதியைத் தாண்டியுள்ள முதல் பாலம் மற்றும் சிப்பியாறு அந்தோனியார் ஆலயத்திற்கு முன்பாக உள்ள இரண்டு பாலங்களிலும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விரிசல்கள் நாளுக்கு நாள் விரிவடைந்து வருவதாகவும், தற்போது மழைக்காலமும் நெருங்கி வரும் நிலையில், பாலங்களின் நிலை தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வீதியே நாளாந்தம் பொதுமக்கள் மட்டுமின்றி நோயாளர் காவு வண்டிகள் உள்ளிட்ட அத்தியாவசிய போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், “பாலம் முழுமையாக சேதமடைந்த பின்னர் தான் வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA)யின் கவனம் திரும்புமா?” என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கடந்த மழைக்காலத்தில் விடத்தல் தீவு அருகே உள்ள மின்னி எறிஞ்சான் பாலம் வெள்ளத்தால் எதிர்கொண்ட நிலையை நினைவு கூறும் மக்கள், இதுபோன்ற ஒரு நிலை மீண்டும் ஏற்படுவதற்கு முன்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பிரதான வீதியின் இருபுறங்களிலும் படர்ந்துள்ள மரங்கள் மற்றும் செடிகளையும் அகற்றி, வாகன ஓட்டிகளின் பார்வைத்திறன் மற்றும் பயண பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.


