யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்த சிறீதரன் எம்.பி.!
யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக பொறுப்பேற்றுள்ள பேரருட்திரு அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகை அவர்களை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்றையதினம் மரியாதை நிமித்தமாக சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான நீதியை நிலைநாட்டுதல், அதற்கான சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீட்டினை ஏற்படுத்தல், மனித உரிமைகளுக்குப் புறம்பான பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதையும், அதைப் பயன்படுத்தித் தமிழ் இளைஞர்கள், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் மற்றும் அநீதியாகக் கைது செய்யப்படுவதையும் நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், பல தசாப்தங்களாக எவ்விதத் தீர்வுமின்றித் தொடரும் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு, நீடித்து நிலைக்கக் கூடிய, உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலான, கௌரவமான, நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைப் பெறுவதற்குரிய முயற்சிகள் குறித்தும், யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்தும் இன்றும் தொடரும் காணி பறிப்பு, உள்ளக இடப்பெயர்வுகள், வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு, வவுனியாவில் முன்னெடுக்கப்படும் சிங்கள மயமாக்கல் திட்டமான கீழ் மல்வத்து ஓயா திட்டம் ஆகியவை தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.