நூதன முறையில் இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற 19 இந்தியர்கள் கைது!
இலங்கையிலிருந்து நூதனமான முறையில் இந்தியாவுக்குத் தங்கம் கடத்த முயன்ற இந்திய நாட்டைச் சேர்ந்த 19 பேர் காங்கேசன்துறை ஊடாகப் பயணம் செய்யத் தயாரான போது இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவின் நாகப்பட்டினத்துக்குப் புறப்படத் தயாராக இருந்த 19 பயணிகளையும் சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.
விசாரணைகளின் அடிப்படையில், இவர்கள் தங்கத்தை நூதனமான முறையில் மறைத்து வைத்து கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 சந்தேகநபர்களையும் ஸ்கானிங் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் இந்திய நாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.