பாகிஸ்தான் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து : 15 பச்சிளங்குழந்தைகள் பலி!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக (PIMS) மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில், குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அல் ஜசீரா மற்றும் ஜியோ ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின் படி, சம்பவம் இடம்பெற்றபோது PIMS மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் 16 பச்சிளங்குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திடீரென ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு குழந்தை மட்டுமே மீட்கப்பட்டதாகவும், ஏனைய 15 குழந்தைகளும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பிரிவில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டி (ஏர் கண்டிஷனர்) ஒன்றின் கம்ப்ரசர் வெடித்ததையடுத்து தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயற்பட்டு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன், சம்பவ இடத்தில் குளிரூட்டும் பணிகளையும் மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.