அமெரிக்கப் பொருட்களுக்கு கனடாவில் வரி!
அமெரிக்காவுடன் தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போருக்கு மத்தியில், அமெரிக்கப் பொருட்களுக்கு எதிராகப் பதிலடித் தீர்வைகளை (Retaliatory Tariffs) கனடா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது இரண்டு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புதிய வரிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில், 27.6 பில்லியன் கனேடிய டொலர்கள் ($19.9 பில்லியன்) மதிப்பிலான அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா வரி விதிக்கவுள்ளது.
இதன்படி, இரும்பு (Steel), அலுமினியம், பால் பொருட்கள், உபகரணங்கள், விவசாய உபகரணங்கள், கூழ் மற்றும் காகிதம், பிளாஸ்டிக் மற்றும் மின்னணு சாதனங்கள் உட்பட 700-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு குறித்த தீர்வைகள் பொருந்தும்.
இந்தத் தீர்வைகள் 15% முதல் 50% வரை என்ற வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் செப்டம்பர் 8 முதல் அமுலுக்கு வரவுள்ளன.
வர்த்தகப் போரினால் பாதிக்கப்படும் சிறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்களுக்கு உதவுவதற்காக 7.5 பில்லியன் கனேடிய டொலர் ($5.42 பில்லியன்) நிதி உதவிப் பொதியையும் கனேடிய அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனேடியப் பொருட்கள் மீது 50% வரியை விதித்ததைத் தொடர்ந்து, இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.
அத்துடன், கனடாவின் வாகனத் துறை மீதான வரிகளை இரட்டிப்பாக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளால் அமெரிக்க நுகர்வோரே அதிக விலை கொடுத்துப் பொருட்களை வாங்க வேண்டிய சுமை ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.