ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வைப் புறக்கணிப்போம் – முஸ்லிம் எம்.பி.க்களுக்கு நிசாம் காரியப்பர் அழைப்பு.!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ள இப்தார் நிகழ்வைப் புறக்கணிக்குமாறு எதிர்க்கட்சியின் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், இவ்வழைப்பை முன்வைத்து தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
அவர் மேலும் கூறியதாவது:ஈரானின் சட்டபூர்வ தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிராக இலங்கை அரசு இதுவரை எந்தவொரு கண்டனத்தையும் வெளியிடாதது கவலைக்குரியது. இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராகத் தகுந்த முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட வேண்டும் என்பதும் அவசியமானதாகும்.
இவ்வாறான இராஜதந்திர சூழ்நிலையில், ஜனாதிபதியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்தார் நிகழ்வில் கலந்துகொள்வது பொருத்தமற்றதாகும் என அவர் குறிப்பிட்டார்.எனவே, எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.