வீதி நாடக வழக்கு: ஹிருணிகா உட்பட 15 பேருக்கு மீண்டும் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு.!
கடந்த 2022ஆம் ஆண்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் சட்டவிரோதமாக வீதி நாடகம் அரங்கேற்றி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேரை மீண்டும் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதிவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்திற்கு விசேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர். சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், மேலதிக சட்ட ஆலோசனை பெறும் பொருட்டு விசாரணை அறிக்கைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனை ஆராய்ந்த நீதிவான், சட்ட மா அதிபரின் ஆலோசனைகள் மற்றும் விசாரணை முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்க வழக்கை ஓகஸ்ட் 17ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.இன்றைய விசாரணையின் போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட அனைத்து பிரதிவாதிகளும் நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகியிருந்தனர்.