சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் திட்டம் காரைதீவில் ஆரம்பம்.!
“தூய இலங்கை” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய உற்பத்தித்திறன் செயலகம் முன்னெடுத்து வரும் சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமத் திட்டத்தின் ஒரு பகுதியாக, காரைதீவு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மாளிகைக்காடு மேற்கு கிராமத்தை சமூக உற்பத்தித்திறன் கிராமமாக அபிவிருத்தி செய்யும் ஆரம்ப நிகழ்வு இன்று (16) நடைபெற்றது.
காரைதீவு பிரதேச செயலாளர் எந்திரி ஜி. அருணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், உற்பத்தித்திறன் மூலம் நாட்டை அபிவிருத்தி நோக்கில் முன்னேற்றும் வேலைத்திட்டம் தொடர்பான விளக்கங்கள் காணொளி வடிவில் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் சமூக உற்பத்தித்திறன் தொடர்பான விளக்க உரையையும் பிரதேச செயலாளர் நிகழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து உற்பத்தித்திறன் தொடர்பான விழிப்புணர்வு காணொளியும் காண்பிக்கப்பட்டதுடன், கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கரையோரப் பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் பிரத்யேக செயலாளர் எஸ். இம்தியாஸ் கலந்து கொண்டார்.
மேலும், “தூய இலங்கை” திட்டத்தின் காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்பாளர், காரைதீவு பிரதேச சபையின் பதில் தவிசாளர், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் பர்ஹான், உற்பத்தித்திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.