தமிழர் பிரச்சினை பற்றி ஜனாதிபதி – மனோ எம்.பி. அடுத்த வாரம் நேரில் பேச்சு.!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பிக்கும் இடையில் இன்று விசேட தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி தனது அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில்லை என மனோ கணேசன் பகிரங்கமாகக் குற்றச்சாட்டு முன்வைத்திருந்த நிலையில், இன்று இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளமை அரசியல் வட்டாரங்களில் கவனிப்பைப் பெற்றுள்ளது.
“ஜனாதிபதி அநுர தற்போது எனது தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில்லை” என்று மனோ கணேசன் கொழும்பில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்தே, இன்று ஜனாதிபதி தரப்பிலிருந்து இந்தத் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தொலைபேசி உரையாடலின் போது, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அவசர பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாட வேண்டியதன் அவசியத்தை மனோ கணேசன் வலியுறுத்தினார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தூதுக்குழுவை அடுத்த வாரம் நேரில் சந்தித்து உரையாட அழைப்பு விடுத்துள்ளார்.
மலையகத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் தற்போதைய வாழ்வாதார மற்றும் அரசியல் சார் பிரச்சினைகள் குறித்து இச்சந்திப்பின் போது விரிவாக ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.