சட்டவிரோதமாக டீசலை சேகரித்து வைத்திருந்த நால்வர் சிக்கினர்.!
சட்டவிரோதமான முறையில் 19,060 லீற்றர் டீசலை சேகரித்து வைத்திருந்த நான்கு சந்தேகநபர்கள் குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் நேற்று (11) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 20, 22, 32 மற்றும் 42 வயதுடைய ஹெய்யந்துடுவ, திஹகொட மற்றும் நெலும்தெனிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
குற்றப்புலனாய்வுப் பணியகத்திற்குக் கிடைத்த தகவலுக்கு அமைய உத்தியோகத்தர்கள் குழுவொன்றினால் பியகம பகுதியில் சோதனை நடத்தப்பட்டது.
இதன்போது சட்டவிரோதமான முறையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 19,060 லீற்றர் டீசல் அடங்கிய 02 பவுசர் வாகனங்களுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு பியகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் எவ்வித அனுமதிப்பத்திரமும் இன்றி வீதியில் பயணிக்கும் லொறிகள், டிப்பர் வாகனங்கள் மற்றும் பிரைமூவர் போன்ற வாகனங்களுக்குப் பணம் வழங்கி, அவ்வாகனங்களின் தாங்கிகளிலிருந்து டீசலைப் பெற்று, தாங்கள் தயாரித்துள்ள தாங்கிகளில் சேமித்து விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
வாகனங்களில் இருந்து எரிபொருளைப் பெறுவதற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார்கள் பொருத்தப்பட்ட 02 குழாய்கள், 16 இரும்புப் பீப்பாய்கள் மற்றும் 381,000 ரூபா பணம் என்பன பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் இன்று (12) மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பியகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.