இலங்கையின் சுற்றுலாத் துறையில் புதிய புரட்சி – யாழ்ப்பாணத்திற்கு முன்னுரிமை .!
இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஆற்றல்மிக்க இடங்களை அடையாளம் கண்டு, அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 2026 – 2028 காலப்பகுதிக்கான விரிவான சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில், பேண்தகு சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், முழுமையான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சுமார் 2,667.03 மில்லியன் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் திட்டம் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கும், பிராந்திய உட்கட்டமைப்பு வசதிகளை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலா உட்கட்டமைப்புகளைமேம்படுத்துவதற்காக 131.02 மில்லியன் ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு திட்டமிடல் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறித்த யாழ்ப்பாண அபிவிருத்தித் திட்டம் 2026 ஆம் ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முன்வைத்த இந்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதுடன், இதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறை எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.