தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்கள் விடுதலை
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 09 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய மன்னார் மேலதிக நீதிவான் இன்று வியாழக்கிழமை (03) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் இந்திய இழுவைப் படகு ஒன்றுடன் குறித்த 09 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனையடுத்து, கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் 09 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் அவர்கள் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இடம்பெற்ற வழக்கு விசாரணையில் 09 இந்திய மீனவர்களையும் விடுதலை செய்ய மன்னார் மேலதிக நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.