தமிழ் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செய்தி வெளியிட தடை விதிப்பது வேதனையான விடயம்.!
போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த போதும் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே உள்ளன என்றும், அவர்களைச் சுதந்திரமாக செய்தி வெளியிடத் தடை விதிப்பதும் மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதும் வேதனையான விடயம் என்றும் யாழ். ஊடக அமையத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கு. செல்வகுமார் தெரிவித்தார்.
மறைந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாசின் நினைவு தினமானது யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிலையில், அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் பகுதிகளில் இடம்பெறும் மக்களின் பிரச்சினைகளைத் தமிழ் ஊடகவியலாளர்களே தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றனர். தென்னிலங்கை ஊடகங்கள் அதனை வெளிப்படுத்தத் தவறிவிட்டன.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கப்பெற்றிருந்தால், இந்த அரசைத் தமிழ் மக்கள் தங்களது அரசாகக் கருதியிருப்பார்கள்.
அரச ஊடகங்களில் நேர்மையாகப் பணியாற்றுபவர்கள் வெளியேற்றப்படுகின்றனர். செம்மணி மனிதப் புதைகுழி, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும் போராட்டங்களில் செய்தி சேகரித்தமை போன்ற காரணங்களைக் காட்டி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் அரச ஊடகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளமை இதற்குச் சான்றாகும்.
நடைபெறும் உண்மையான சம்பவங்களை மறைக்காமல் வெளிப்படுத்துவதே ஊடகவியலாளர்களின் கடமை. தங்களுக்கு எதிரான விடயங்களை மறைக்கும் விதமாகச் செய்திகளைத் தணிக்கை செய்வதில் அரச ஊடகங்கள் செயற்படுகின்றன.
சுதந்திரமாகச் செய்தி அறிக்கையிடுவதற்குத் தடை விதித்து ஊடகவியலாளர்களை மன உளைச்சலுக்குள்ளாக்கும் போக்கு ஜனநாயக நாட்டுக்கு முரணானது.” – என்றார்.