உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க தீர்மானம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று (வியாழக்கிழமை) சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் ஒன்றை முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள இந்தத் தீர்மானத்தில், தமிழுக்கு வழங்கப்பட்டுள்ள செம்மொழி அந்தஸ்து மற்றும் சட்டத்துறையில் கலைச்சொற்களை உருவாக்குவதில் தமிழ் மொழி அடைந்துள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் சுட்டிக்காட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மின்னணு நீதிமன்றங்கள், தொழில்நுட்ப அடிப்படையிலான மொழிபெயர்ப்பு வசதிகள், சட்டத் தரவுத்தளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்கள் காரணமாக, நீதித்துறையில் மொழிப் பயன்பாடு தொடர்பான நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தீர்மானத்தில் குறிப்பிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாக தமிழ் இருப்பதுடன், சாட்சியங்களை பதிவு செய்வது உள்ளிட்ட நீதித்துறை நடவடிக்கைகளிலும் தமிழைப் பயன்படுத்துவதற்கான சட்டரீதியான வாய்ப்புகள் உள்ளதாகவும் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்படலாம்.
மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்படும் தீர்ப்புகள், ஆணைகள் மற்றும் ஏனைய நீதித்துறை உத்தரவுகளை தமிழிலும் கிடைக்கச் செய்வதற்கான கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, 2006ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் திகதி தமிழக சட்டப்பேரவையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவது தொடர்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
குறித்த தீர்மானம் மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும், அதற்கு உச்ச நீதிமன்றத்தின் முதன்மை அமர்வு ஒப்புதல் வழங்கவில்லை என 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மாநிலங்களவையில் அப்போதைய மத்திய சட்ட அமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கேள்வி நேரம் நிறைவடைந்த பின்னர் முதலமைச்சர் விஜய் இந்தத் தனித் தீர்மானத்தை சட்டப்பேரவையில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தீர்மானம் தொடர்பில் சட்டப்பேரவையில் விவாதம் இடம்பெறக்கூடும் எனவும், பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.