இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், மீட்க முடியாத நிலையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1.86 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று (02) நடைபெற்ற கூட்டத்தில் 24 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், கடலில் மீன்பிடிக்கும்போது காணாமல் போகும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தினசரி உதவித்தொகை ரூ.350 இலிருந்து ரூ.600 ஆக உயர்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
அண்டை நாட்டினரால் சிறைபிடிக்கப்படும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் தினசரி உதவித்தொகையும் ரூ.500 இலிருந்து ரூ.600 ஆக உயர்த்தப்படவுள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி அரசு மீன் பண்ணையில் ரூ.24 இலட்சம் செலவில் மீன் விரலிகள் உற்பத்திப் பிரிவு அமைத்தல், திருவொற்றியூர் மீன்பிடித் துறைமுகத்தில் நவீன மீன் சந்தை அமைத்தல் மற்றும் கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் வெப்பநிலை கட்டுப்படுத்தும் மின்னணு ஏலக்கூடம் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களையும் அமைச்சர் அறிவித்துள்ளார்.