அடுத்த அடி அமித் ஷாவிற்கு – கரப்பான் பூச்சி அமைப்பினர் அதிரடி!!!
டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி சம்பவத்திற்கு பொறுப்பேற்று, இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் நிறுவனர் அபிஜீத் தீப்கே வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அபிஜீத் தீப்கே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவு இன்றி இத்தகைய தடியடி இடம்பெற்றிருக்க முடியாது என்றும், எனவே அதற்கு பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ள கோரிக்கைக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பு முழு ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஜனநாயகம் பெரும் ஆபத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், நீதித்துறை மீதே கேள்விகள் எழுப்பப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் கவலை வெளியிட்டார்.
மேலும், நாட்டின் பண்பாட்டையும் எதிர்காலத்தையும் சரியான பாதையில் வழிநடத்தும் முழுத் திறன் இன்றைய இளம் தலைமுறைக்கு உள்ளது என்றும் அபிஜீத் தீப்கே சுட்டிக்காட்டினார்.