மெட்டாவின் மெகா திட்டம் – 50பில்லியன் டொலர் முதலீடு!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள தனது தரவு மையத்தை விரிவுபடுத்தப்போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹைபெரியன் என்று அழைக்கப்படும் இந்த தரவு மையத்தின் முதலீடு 50 பில்லியன் டொலராக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம், தரவு மையத்தின் கம்ப்யூட் திறன் 5 ஜிகாவோட்டாக அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் உள்ளூர் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 1 பில்லியன் டொலருக்கும் மேல் செலவிடப்பட உள்ளது.
மேலும், இந்த தரவு மையத்தால் கிடைத்த வரி வருவாய் மூலம், ரிச்லேண்ட் பாரிஷ் பகுதியில் உள்ள ஆசிரியர்களுக்கு 50,000 டொலர் வரையிலான ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்த திட்டத்தினால் ஏற்படும் அதிகபடியான மின்சாரத் தேவை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய செலவுகள் குறித்து சில சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் அமைப்புகள் கவலை தெரிவித்து வருகின்றன.
உலகளவில் AI தொழில்நுட்பத்திற்கான போட்டி அதிகரித்து வரும் சூழலில், மெட்டா நிறுவனம் தனது தரவு மையங்களை விரிவுபடுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.
தற்போது உலகம் முழுவதும் மெட்டா நிறுவனம் 32 தரவு மையங்களைச் செயல்படுத்தி வருகிறது அல்லது கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது.