குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் கலந்துரையாடல்.!
கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ராஜமணி பிரசாந்த் கொட்டகலை பிரதேசத்தில் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் முகாமையாளர் எஸ்.லோரன்ஸுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்.
வேல்ட்விஷன் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பில்,
தற்போது பல இடங்களில் குடிநீர்ப் பிரச்சனை பாரிய சவாலாக மாறியுள்ளது. எனவே, குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கான பல்வேறு திட்டங்களை வகுப்பது தொடர்பில் பேசப்பட்டதுடன் குறிப்பாக கொட்டகலை பிரதேச சபைக்கு உட்பட்ட பல இடங்களிலே வேர்ல்ட் விஷன் நிறுவனத்தினால் அமைக்கப்பட்டு, அவர்களது பராமரிப்பிலே இருக்கின்ற குடிநீர் வழங்கல் வேலைத்திட்டங்களை முறையாக பிரதேச சபைக்கு பொறுப்பெடுத்து அதனூடாக மக்களுக்கு துரிதமான நீர் விநியோகச் சேவையினை வழங்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டது.
மேலும், எதிர்காலத்தில் பல குடிநீர் விநியோகத் திட்டங்களையும் சபையுடன் இணைந்து செயல்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் வேர்ல்ட் விஷன் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களிலே பிரதேச சபையின் பங்களிப்பைப் பெற்று பல புதிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வேல்ட்விஷன் நிறுவனத்திற்கு சொந்தமான நீர்த்தாங்கி ஒன்றையும் கொட்டகலை பிரதேச சபைக்கு பெற்றுக் கொடுப்பதற்கு வேர்ல்ட் விஷன் நிறுவனத்தினால் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் வேர்ல்ட் விஷன் நிறுவனமும் கொட்டகலை பிரதேச சபையும் இணைந்து பல நலன்புரிச் சேவைகளை பொதுமக்களுக்கு செய்வதற்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
