அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் பயன்பாடு – சுற்றுலா மற்றும் தேவையற்ற பயணங்களை தவிர்க்க அதிகாரிகள் அறிவுறுத்தல்.!
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (17) நடைபெற்ற எரிபொருள் நெருக்கடி மற்றும் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன் தெரிவித்ததன்படி, அரசு ஊழியர்களுக்கான எரிபொருள் விநியோகம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும் நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே அரசு வாரத்தில் ஒரு நாள் விசேட விடுமுறையை அறிவித்துள்ளது.
மன்னார் மாவட்டத்தில் சுமார் 45,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் அறுவடை நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டு, அறுவடை இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருள் ஒரு ஏக்கருக்கு 15 லிட்டர் அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.மேலும், மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான எரிபொருளும் முறையாக வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
QR குறியீடு முறையில் ஏற்படும் சிக்கல்கள், குறிப்பாக இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை வாகன உரிமையாளர்களுக்கு உள்ள பதிவேற்றப் பிரச்சினைகள், இன்னும் ஓரிரு தினங்களில் முழுமையாக தீர்க்கப்படும்.பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் இலங்கை போக்குவரத்துச் சபையின் மூலம் அடுத்த 2–3 நாட்களில் விசேட QR நடைமுறையில் எரிபொருள் வழங்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
உலகளாவிய எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் எரிபொருளைப் பயன்படுத்தி, தேவையற்ற சுற்றுலாக்கள் மற்றும் பயணங்களைத் தவிர்க்குமாறு மக்களுக்கும் அதிகாரிகளுக்கும்கேட்டுக்கொள்ளப்பட்டது.
ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ஒரு கப்பல் வருகை தந்து எரிபொருள் இறக்கும் பணிகள் நடப்பதால், தட்டுப்பாடின்றி விநியோகம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.