காலாவதியான மருந்துகள் வைத்திருந்த கல்முனை தனியார் வைத்தியசாலைக்கு அபராதம்.!
காலாவதியான மருந்துப் பொருட்களை பாவனைக்கு வைத்திருந்த குற்றச்சாட்டில் கல்முனை பகுதியில் இயங்கி வந்த தனியார் வைத்தியசாலைக்கு 100,000 ரூபாய் அபராதம் விதித்து கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் இயங்கி வரும் குறித்த தனியார் வைத்தியசாலையில் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட பொறுப்பதிகாரி தலைமையிலான புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது, பாவனைக்காக வைத்திருந்த காலாவதியான மருந்துப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இதையடுத்து அந்த வைத்தியசாலைக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு இன்று (12) கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குற்றத்தை ஏற்றுக்கொண்ட தனியார் வைத்தியசாலையின் முகாமையாளருக்கு 100,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், குறித்த வழக்கில் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான புலனாய்வு அதிகாரி இஷட் எம். ஸாஜீத், சம்பவம் தொடர்பான விளக்கங்களை மன்றில் சமர்ப்பித்தார்.