மட்டக்களப்பில் கவனயீர்ப்பு ஊர்வலமும் கையெழுத்து போராட்டமும் முன்னெடுப்பு.!
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அதன் வலியை உணர்ந்த சமூகம் என்ற அடிப்படையில் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்த நிலைமை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சமாதானமும் நீதியும் நிலைநிறுத்தப்படவேண்டும் என மட்டக்களப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாண பெண்கள் வலையமைப்பின் அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஊர்வலமும் கையெழுத்து போராட்டமும் மட்டக்களப்பில் நடைபெற்றது.
இலங்கையில் பெண்களின் உரிமையினை நிலைநாட்டும் வகையில் 2024ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழு உடனடியாக செயற்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில் அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் நிர்வாகத்தினர், பெண் செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மட்டக்களப்பு நகரின் காந்திபூங்கா வரையில் கவனயீர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து இலங்கையில் பெண்களின் உரிமையினை நிலைநாட்டும் வகையில் 2024ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ள சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழு இதுவரையில் சரியாக இயங்காத நிலையில் உள்ளதனால் அதனை சரியான முறையில் இயங்கச்செய்வதற்கு அரசாங்கத்தினை வலியுறுத்தும் வகையிலான மகஜர் ஒன்றை வழங்கும் வகையில் இந்த கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவுக்கு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதிலும் இந்த அரசாங்கம் இந்த ஆணைக்குழுவினை இயங்குவதற்கான முன்னுரிமை அடிப்படையிலான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இதன்போது ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக 1800க்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் பெறப்பட்ட மகஜரும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த நாட்டில் நாங்கள் யுத்த நிலையில் வாழ்ந்த அதன் வலிகளையும் வேதனைகளையும் எதிர்கொண்ட மக்கள் என்ற அடிப்படையில் உலகளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ள யுத்த நிலைமைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நீதியும் சமாதானமும் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.




