அரசியல் நோக்கங்களுக்காகவே தொழிற்சங்க போராட்டம்.!
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ரயில்வே பணிப்புறக்கணிப்பானது முழுக்க முழுக்க அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழிற்சங்க போராட்டமாகும் என பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன ஊடகங்களுக்கு இன்றைய தினம் கொழும்பில் தெரிவித்தார்.
22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எதிராகச் தொழிற்பட்ட மற்றும் கையெழுத்திட்ட தரப்பினரே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களின் பெயர்கள் மற்றும் பின்னணியை ஆராயும்போது இதன் பின்னணியிலுள்ள அரசியல் சதி தெளிவாவதாகக் குறிப்பிட்டார்.
இப்போராட்டம் காரணமாக பயணச்சீட்டுகள் வழங்கப்படாமல் ரயில்கள் இயக்கப்படுவதால் அரசுக்கு பாரிய நிதி இழப்பு ஏற்படுகின்ற போதிலும், தினசரி ரயிலைப் பயன்படுத்தும் மக்களின் சிரமங்களைக் குறைப்பதற்காகவே பயணச்சீட்டுகள் இன்றியேனும் ரயில் சேவைகளைத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், கண்டி – பேராதனை ரயில் பாதை அபிவிருத்தி குறித்துப் பேசிய அவர், ‘களு பாலம்’ (கருப்பு பாலம்) புனரமைப்புப் பணிகள் எதிர்வரும் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையும் எனத் தெரிவித்தார்.
மேலும், அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தற்போதைய பாலத்திற்குச் சமாந்தரமாக மேலும் ஒரு புதிய பாலத்தைக் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டு வருவதாக அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.