மீனவர் பிரச்சினை: 25ஆம் திகதி இந்தியா செல்லும் இலங்கை அதிகாரிகள் குழு
இலங்கை – இந்தியா இடையே நீண்டகாலமாக நிலவிவரும் மீனவர் பிரச்சினைகள் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை அதிகாரிகள் குழு எதிர்வரும் 25ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (05) வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ள இந்தப் பயணம் கச்சதீவு தொடர்பில் விவாதிப்பதற்கானதல்ல எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவில் இருந்து இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி வரும் இழுவைப்படகுகளால் வடக்கு கடற்பரப்பின் கடல்வளம் மற்றும் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தொடர்பிலேயே முக்கியமாக கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது மற்றும் இலங்கையின் கடல் எல்லையைப் பாதுகாப்பது தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
கச்சதீவு இலங்கைக்கே உரித்தானது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை எனத் தெரிவித்த அவர், சர்வதேச சட்டங்கள், இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்கள் மற்றும் கடல் எல்லை நிர்ணயம் தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில் கச்சதீவு இலங்கையின் இறையாண்மைக்கு உட்பட்டது எனவும் தெரிவித்தார்.
தமிழக அரசியல்வாதிகள் தமது அரசியல் இருப்பு மற்றும் வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்காகவே கச்சதீவை மீளப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து முன்வைத்து வருவதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை மையமாகக் கொண்டு சஜித் பிரேமதாஸ மற்றும் ரணில் விக்கிரமசிங்க தரப்புகளுக்கு இடையில் இடம்பெறும் அரசியல் போட்டி மக்களின் நலனுக்காக அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய அரசியல் சக்திகள், தங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே இதுபோன்ற அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருவதாகவும் அமைச்சர் இ. சந்திரசேகர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் அரசியல் சலசலப்புகளுக்கு இடமளிக்காமல், நாட்டின் எதிர்கால நலனை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியான மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.