இந்திய மீனவர்கள் இனி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையக் கூடாது!
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழையமாட்டார்கள் என்ற உத்தரவாதம் அவசியம்
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவுக்குச் செல்லவுள்ள அதிகாரிகள் மட்டக் குழு, இனிவரும் காலங்களில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையமாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை இந்திய அரசிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான என்.எம். ஆலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து தடைசெய்யப்பட்ட இழுவைமடி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய, குறிப்பாக தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்களின் நடவடிக்கைகள் முழுமையாகத் தடுக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை விடுவிப்பதில் மாற்றுக் கருத்தில்லை எனக் குறிப்பிட்ட அவர், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதுடன், இனிவரும் காலங்களில் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையமாட்டோம் என்ற உறுதிமொழியையும் இந்திய தரப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அவ்வாறான உத்தரவாதம் கிடைக்கும் பட்சத்திலேயே வடமாகாண மீனவர்கள் இந்தப் பேச்சுவார்த்தைக்கு முழுமையான ஆதரவை வழங்குவார்கள் எனவும் என்.எம். ஆலம் தெரிவித்தார்.