டிலக்சன் மீதான அடக்குமுறைக்கு சுகிர்தன் கடும் கண்டனம்
ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் மீதான அடக்குமுறைக்கு சுகிர்தன் கண்டனம்
தமிழ் ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் மீதான ஊடக அடக்குமுறையை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச. சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ஆட்சி அதிகாரத்தில் இல்லாத காலத்தில் தங்களை ஜனநாயகவாதிகளாகவும் ஊடகங்களின் நண்பர்களாகவும் காட்டிக்கொண்ட தேசிய மக்கள் சக்தி, ஆட்சிக்கு வந்த பின்னர் ஊடகவியலாளர்கள் மீது அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் முன்னெடுத்து வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் இயலாமை, ஊழல் மற்றும் செயற்றிறனற்ற தன்மைகளை ஊடகவியலாளர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதால், தமது உண்மை நிலை மக்களிடம் அம்பலமாகிவிடும் என்ற அச்சத்திலேயே இத்தகைய அடக்குமுறைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் நீண்டகாலமாக சுயாதீனமாகச் செயற்பட்டு வரும் ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன், கொள்கை ரீதியாகத் தவறு செய்யும் தமிழ்த் தேசியவாதிகளுக்கு எதிராகவும் துணிந்து கருத்துக்களைப் பதிவு செய்தவர் எனவும் சுகிர்தன் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சுதந்திரமான ஊடகவியலாளர் ஒருவர் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் பழிவாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதிகளைக் கண்டித்து வந்தவர்கள், தற்போது அதிகாரத்துக்கு வந்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை முன்னெடுத்து வருவதாகவும் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் ஊடக சுதந்திரத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடராத வகையில் அரசாங்கம் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சன் மீதான அடக்குமுறையை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச. சுகிர்தன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
