மன்னாரில் மாணவர்களுக்கு இலவச மாதிரி வினாத்தாள்கள் வழங்கும் திட்டம் ஆரம்பம்
மன்னார் நகர சபையின் சிறுவர் பூங்காவில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு இலவசமாக மாதிரி வினாத்தாள்கள் வழங்கும் திட்டம் நேற்று (04) மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
“தானத்தில் சிறந்தது கல்வி” எனும் தொனிப்பொருளில் முன்னாள் மாவட்ட வேகநடை விளையாட்டு வீரர் பிரதீபன் தலைமையில் விசேட நிகழ்வு நடைபெற்றது.
இதன் கீழ், வார விடுமுறை நாட்களில் மன்னார் நகர சபையின் சிறுவர் பூங்காவிற்கு வருகை தரும் புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு மாதிரி வினாத்தாள்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தையும் பரீட்சைத் தயார்படுத்தலையும் ஊக்குவிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டம், 2027ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி வளங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களின் பரீட்சைத் தயார்படுத்தலுக்கு பங்களிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் நகர சபை தலைவர் டானியல் வசந்தன் கலந்து கொண்டதுடன், இதய தொழில்நுட்பவியலாளர் நிறோன், உளநல சமூக உத்தியோகத்தர் ரொமி யூலன், குறைதீர்ப்பு ஆலோசகர் கூஞ்ஞ மற்றும் G.L.P கட்டிட நிர்மாண நிறுவன தலைவர் லிங்கேஸ்வரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
கடந்த வருட புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற மாணவன் ஆத்விக் மெத்யூ, அடுத்த வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு முதல் கட்டமாக மாதிரி வினாத்தாள்களை வழங்கி வைத்தார்.