எகிப்துக்கு சீன ஜனாதிபதி பயணம்
மேற்காசிய பிராந்தியத்தில் சீனாவின் அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் எகிப்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் அந்நாட்டு ஜனாதிபதி அப்துல் ஃபத்தா எல்சிசியை சந்தித்த ஷி ஜின்பிங், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சர்வதேச அரங்கில் நிலவும் தன்னிச்சையான ஆதிக்கம் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டும் என ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சர்வதேச விவகாரங்களில் நியாயமான மற்றும் சமத்துவமான நிர்வாக நடைமுறையை ஏற்படுத்துவதற்கு இரு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தைவான் விவகாரத்தில் சீனாவின் இறையாண்மை நிலைப்பாட்டுக்கு எகிப்து தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி அப்துல் ஃபத்தா எல்சிசி உறுதியளித்துள்ளார்.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக ஹோர்முஸ் நீரிணை வழியாக இடம்பெறும் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எகிப்தின் கட்டுப்பாட்டில் உள்ள சூயஸ் கால்வாய் சர்வதேச எரிபொருள் விநியோகத்துக்கான முக்கிய மாற்றுப் பாதையாக காணப்படுகிறது.
அத்துடன், அரபு நாடுகளுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையே சமரசப் பங்காளியாக சீனா தன்னை முன்னிறுத்துவதற்கும், எகிப்துடனான உறவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதன் காரணமாக எகிப்துடனான அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் சீனா அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.