திருமண மண்டபம் ஒன்றின் மீது அமெரிக்கா தாக்குதல்; குழந்தை உட்பட 05 பேர் உயிரிழப்பு.!
ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள தெற்கு ஈரானின் சீரிக் பகுதியிலுள்ள பண்டார் கூஹெஸ்டாக் என்ற இடத்தில் நடைபெற்ற திருமண மண்டபம் ஒன்றின் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் 04 வயதுக் குழந்தை உட்பட 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக ஈரானிய செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை ஈரானிய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்தியாவிலுள்ள ஈரானியத் தூதரகம் ஆகியவை கடுமையாகக் கண்டித்துள்ளது
அத்துடன், இதனை “அமெரிக்கப் பயங்கரவாத இராணுவத்தின் கொடூரக் குற்றம்” எனச் சாடியுள்ளன.
செவ்வாய்க்கிழமை அன்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் இராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
ஈரானிய வான் பாதுகாப்பு தளங்கள், ரேடார் அமைப்புகள், கடற்படை உள்கட்டமைப்புகள், கண்ணிவெடி வைக்கும் வசதிகள் மற்றும் தொலைத்தொடர்பு மையங்கள் மீது இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இத்தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானின் புரட்சிகர காவல் படைகள் ஜோர்தான், ஈராக் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களை இலக்கு வைத்து பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜோர்தானிய வான்வெளியில் நுழைந்த 13 பாலிஸ்டிக் ஏவுகணைகளில் 10 ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
பஹ்ரைனில் ஈரானிய ட்ரோன்கள் அழிக்கப்பட்ட நிலையில், வடக்கு ஈராக்கின் அர்பிலில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல் படைகள் அறிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே நடந்துள்ள மிக மோசமான நேரடி இராணுவ மோதல் இதுவாகும்.
இதனால் மேற்காசியாவில் போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது.