தொடர்ச்சியான ஏமாற்றுதல்களால் இலங்கை முற்றாக ஸ்தம்பித்துள்ளது : சஜித் குற்றச்சாட்டு!
தொடர்ச்சியாக இரண்டு சந்தர்ப்பங்களில் இந்நாட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, 2019ஆம் ஆண்டில் ஏமாந்து நாடு வங்குரோத்தடைந்தது போல், 2024 இலும் ஏமாந்து இன்று முழுச் சமூகமும் முற்றாக ஸ்தம்பித்துப் போயுள்ளது என்றார்.
அநுராதபுரம் மாவட்டம், மதவாச்சிய தேர்தல் தொகுதி, ரம்பாவ பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர் விரிவாக்க விசேட வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளிகள், தொழில்முனைவோர்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 220 இலட்சம் மக்களும் தற்போது கடுமையான அசௌகரியத்துக்கும் பீதிக்கும் ஆளாகியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களத்தின் பிரகாரம் முப்பது நாள்கள் ஒரு நபர் வாழ்வதற்கு 17 ஆயிரத்து 315 ரூபா போதுமானதாகக் கூறப்பட்டுள்ளது. தற்போதைய அரசின் கொள்கைகள் இதுபோன்ற பொய்யான தரவுகளை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன.
தேர்தல் காலத்தில் நெல் ஒரு கிலோவுக்கு 150 ரூபா உத்தரவாத விலை தருவதாகக் கூறிவிட்டு, தற்போது 120 ரூபாவே வழங்கப்படுகின்றது. ஆனால், நெல் ஒரு கிலோவை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாவதாக விவசாய அமைச்சரே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தால் குறைத்தல், துறைமுகத்தில் இறக்கப்படும் விலைக்கு எரிபொருள் வழங்குதல் மற்றும் 12 இலட்சத்துக்கு விட்ஸ் ரக கார் வழங்குதல் போன்ற எவைகளுமே இதுவரை அரசால் நிறைவேற்றப்படவில்லை.” – என்றார்.



