உயர்தரப் பரீட்சையை நவம்பர் மாதத்துக்கு பிற்போடுவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை.!
2026 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையை இரண்டு மாதங்களுக்குப் பிற்போட்டு நவம்பர் மாதம் நடத்துவதால் பாரிய பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பொதுமனுக்கள் பற்றிய குழுவின் நடவடிக்கைமுறை மற்றும் செயலாற்றுகை பற்றிய சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“கடந்த காலங்களில் ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு 800 நாட்களுக்கு மேற்பட்ட காலம் வழங்கப்பட்டிருந்த போதிலும், 2026 ஆம் ஆண்டுக்கான அவகாசம் 709 நாட்களாகவே வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றங்கள் ஊடாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதால், அனைத்துத் தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலமே இதற்குத் தீர்வுகாண வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்தபோது மாணவர்களின் உரிமைகள் குறித்துக் குரல் கொடுத்தது. எனவே, தற்போது ஆட்சியில் இருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசு மாணவர்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு உரிய முடிவை எடுக்க வேண்டும்.” – என்றார்.