மாகாண சபைத் தேர்தலை நடத்த அநுர அரசுக்குத் தைரியமில்லை – எதிர்க்கட்சி விமர்சனம்!
“மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு இதுவரை எந்தவிதமான வினைத்திறனான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.
தேர்தல் குறித்து ஆராயும் நாடாளுமன்றச் செயற்குழுவின் நடவடிக்கைகள் மீது எமக்கு நம்பிக்கையில்லை. அவர்கள் காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றனர்.”
– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவோம் என்று அரசு மேடைப் பேச்சுகளில் மாத்திரமே கூறி வருகின்றது, செயலில் ஒன்றும் நடக்கவில்லை.
செயற்குழுவில் முன்வைக்கப்படும் யோசனைகளை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையிலேயே அரசின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. தேர்தலை விரைவாக நடத்தும் எவ்வித நோக்கமும் அரசுக்கு இல்லை.
மக்கள் மத்தியில் தமக்கு ஆதரவு இருப்பதாகக் கூறும் அரசு, தைரியமிருந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும்.
தேர்தல் ஒன்று இடம்பெற்றால் மட்டுமே மக்கள் தமது உண்மையான அபிப்ராயத்தை வெளிப்படுத்துவார்கள்.
அரசின் மீதான மக்களின் நம்பிக்கை தற்போது பெருமளவு சிதைவடைந்துள்ளதால், அரசு தேர்தலுக்குச் செல்ல அஞ்சுகின்றது.” – என்றார்.