விறகு வெட்டச் சென்ற மூவருக்கு நேர்ந்த துயரம்.!
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை தோட்டத்தில் உள்ள இரு மாணவர்கள் உட்பட மூவர் விறகு வெட்டச் சென்ற போது மின்சார தாக்குதலுக்கு இலக்கான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் இன்று 27 ஆம் திகதி மதியம் இடம்பெற்றுள்ளது.
குயில்வத்தை தோட்டத்தில் உள்ள 35 வயதுடைய ஆண் ஒருவர் மற்றும் வட்டவளை குயில்வத்தை தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 7 மற்றும் தரம் 8இல் கல்வி பயிலும் 12, 13 வயதுடைய இரு மாணவர்கள் இருவர் அடங்கிய மூன்று பேர் வீட்டுக்கு விறகு தேடிச் சென்று அப்பகுதியில் உள்ள மரத்தில் ஏறி கிளை ஒன்றை வெட்டிய போது அந்த கிளை அப் பகுதியில் சென்ற 33000 வோல்டேஜ் அதி உயர் மின்சார கம்பியில் விழுந்ததால் மின்சார தாக்குதலுக்கு இலக்காகி அலறியுள்ளனர்.
மாணவர்கள் அலறுவதைக் கேட்ட தோட்டத் தொழிலாளர்கள், அப் பகுதியில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த வட்டவளை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொலிஸ் கொன்ஸ்டபிள் சஞ்சீவ (84586) என்பவருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
உடனடியாகச் செயற்பட்ட அவர், வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் சந்தன கமகே அவர்களுக்கு அறிவித்துள்ளார்.
பொறுப்பதிகாரி நோட்டன் பிரிட்ஜ் மின்சார நுகர்வோர் மையத்தின் மின்சார அதிகாரியை தொடர்பு கொண்டு உடனடியாக அப் பகுதிக்கான அதி உயர் மின்சார விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை எடுத்தார்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் இரு மாணவர்களையும் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.
இச்சம்பவத்தில் ஒரு மாணவனின் உடலில் பல இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மற்றைய மாணவன் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இதேவேளை, மின்சாரக் கம்பிகளில் உரசியவாறு இருந்த மரத்தின் கிளைகளை அகற்றுவதற்கு மின்சார சபையின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என வைத்தியசாலையில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.