மின்சாரக் கட்டண அதிகரிப்பு; மக்கள் சில தியாகங்களைச் செய்ய வேண்டும்-பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் தெரிவிப்பு.!
மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும்போது அவர் இதனை குறிப்பிட்டார்.
உலக சந்தை நிலவரங்களை கருத்தில் கொண்டு மின்கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் விரும்பவில்லை என அவர் தெரிவித்தார். எனினும், கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாத நிலவரங்களை அடிப்படையாகக் கொண்டு மின்சாரக் கட்டணத்தை 13 சதவீதத்தால் அதிகரிக்க மின்சார சபை முன்மொழிந்துள்ளதாகவும் கூறினார்.
இதற்கான இறுதி முடிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏப்ரல்முதலாம் திகதி அறிவிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா கருத்து தெரிவிக்கையில், நாட்டிற்கு வரவிருந்த எரிபொருள் கப்பல் தாமதமானதனால் எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் இம்மாதம் 25ஆம் திகதி வரை மட்டுப்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதனால் மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் எண்ணெய் மற்றும் நெப்தா பற்றாக்குறை உருவாகும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.மேலும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் எரிபொருள் கப்பல் வரவுள்ளதாக இருந்தாலும், அதில் நெப்தா இருக்காது எனவும், அதற்குப் பதிலாக டீசலை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும் எனவும் கூறினார்.
இந்த நிலைமையால், இரவு நேரங்களில் டீசல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும்அவர் தெரிவித்தார்.
எனவே, பொதுமக்கள் மின்சாரத்தைச் சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், தேவையற்ற விளக்குகளை அணைத்து மின்சார சேமிப்பில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொண்டார்.