ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதியுடன் யாழ்ப்பாணத்தில் சிவில் அமைப்புகள் சந்திப்பு.!
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் இடையிலான விசேட சந்திப்பு இன்று (23) மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் சார்பில் அதன் தலைவர் ஜே. யாட்சன் பிகிராடோ கலந்து கொண்டார்.
இச்சந்திப்பில் நாட்டின் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன. குறிப்பாக, 1979 ஆம் ஆண்டு தற்காலிக சட்டமாக கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டம் 1982 ஆம் ஆண்டு நிரந்தர சட்டமாக மாற்றப்பட்டதுடன், அது பலசமூகங்களுக்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
அரசாங்கம் தேர்தல் காலத்தில் இந்தச் சட்டத்தை ரத்து செய்வதாக உறுதி அளித்திருந்த போதிலும், அது இன்னும் அமலில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதற்கு மாற்றாக முன்வைக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்ட முன்மொழிவுகளும் இதுவரை நடைமுறைக்கு வராதது குறித்தும் கவலை வெளியிடப்பட்டது.
இந்த சட்ட முன்மொழிவுகள் சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் மனித உரிமை நிபந்தனைகளுக்கு முரணாக உள்ளதாகவும் வலியுறுத்தப்பட்டது. எனவே, பயங்கரவாத தடுப்பு சட்டத்தையும் புதிய சட்ட முன்மொழிவுகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரப்பட்டது.
மேலும், மன்னார் பாலம் அருகே அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடி தொடர்பிலும் கவலை வெளியிடப்பட்டது. இது மக்களின் சுதந்திரமான நகர்வை கட்டுப்படுத்துவதோடு, மனித உரிமை மீறலாகக் கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.மேற்கண்ட விடயங்களை உள்ளடக்கிய அறிக்கை, பொதுமக்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு, ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதியிடம் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.