பாடசாலை பேருந்து விபத்து; இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!
இன்று காலை தலவாக்கலை ஹட்டன் பிரதான வீதியில் பாடசாலை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை 7:45 மணியளவில், தலவாக்கலை புனித பெட்ரிக் கல்லூரி (St. Patrick’s College) மாணவர்களை ஏற்றிக்கொண்டு வழமை போல் பயணித்த பாடசாலை பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
தலவாக்கலை இருந்து ஹட்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அதே திசையில் முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு பேருந்துடன், மாணவர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக பேருந்து எதிர்பாராத விதமாக மிக பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
விபத்து நடந்தவுடன் அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
சாரதியின் அதிவேகமே இந்த விபத்துக்கு முக்கிய காரணம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த தலவாக்கலை பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து, போக்குவரத்தைச் சீர்செய்ததுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.