சுற்றுலா மேம்பாட்டை நோக்கி ஜப்பான் பிரதிநிதிக் குழு இலங்கை விஜயம்.!
இலங்கையின் முன்னணி சுற்றுலா நிறுவனம் ஒன்றின் ஒருங்கிணைப்பில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் 11 பேர் கொண்ட ஜப்பான் பிரதிநிதிக் குழு இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்துக்கு வருகை தந்தது.இலங்கை மக்களின் வரலாறு, புத்தமதத்தின் வருகையும் வளர்ச்சியும், பாரம்பரிய கலாசாரம், ஆயுர்வேதம், மரபுப் பழக்கவழக்கங்கள், உணவுமுறைகள் மற்றும் பொருளாதாரப் பயிர்கள் போன்றவற்றை ஆராய்ந்து புரிந்து கொள்வதே இந்தக் குழுவின் நோக்கமாகும்.
இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அவர்கள் கலந்துரையாடியதுடன், இங்கு பெற்ற அறிவையும் அனுபவங்களையும் தங்கள் நாட்டினருடன் பகிர்ந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், ஜப்பானில் இலங்கையை முக்கிய சுற்றுலாத் தலமாக அறிமுகப்படுத்துதல், கொழும்பு, அநுராதபுரம், சீகிரியா, மஹியங்கனைமற்றும் கண்டி ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு நாட்டின் கலாசார மரபுகளை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லுதல் தொடர்பிலும் இதன்போது கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் மூத்த மேலதிக செயலாளர் ரோஷன் கமகே உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து சபுகஸ்கந்த புராண விகாரை, மிஹிந்தலை, அநுராதபுரம், சீகிரியா, தம்பான, மல்வத்து மகா விகாரை மற்றும் துறைமுக நகர் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கும் பிரதிநிதிக் குழுவினர் விஜயம் செய்துள்ளனர்.