பெண்கள் உரிமை கோரி மட்டக்களப்பில் பேரணி.!
சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவை செயற்படுத்த அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மட்டக்களப்பில் பெண்கள் கவன ஈர்ப்பு பேரணி ஒன்று நடத்தப்பட்டது.சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு “நிலையான வாழ்வை நோக்கி ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில் சூரிய பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் பல பெண்கள் அமைப்புகளுடன் இணைந்து இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
சூரிய வள நிலையத்திலிருந்து ஆரம்பமான பேரணி மட்டக்களப்பு நகரம் வழியாக பறை மேளங்கள் முழங்க முன்னேறியது. பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்களை தாங்கியவாறு, வினோத உடைகள் அணிந்த பெண்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
“தீர்மானம் எடுக்கும் மட்டங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் அவசியம்”, “ஒப்புதல் இன்றி உடலுறவு குற்றமாகும்”, “அனைவருக்கும் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக இருக்க வேண்டும்”, “வீட்டு வன்முறை வேண்டாம்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தும் பல வாசகங்கள் பேரணியில் எடுத்துச் செல்லப்பட்டன.
பேரணி கல்லடி பாலம் வழியாக சென்று கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள ஸ்ரீமுருகன் விளையாட்டு மைதானத்தை சென்றடைந்தது. அங்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதன்போது சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஆரம்பிக்க அரசாங்கமும் ஜனாதிபதியும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.