கல்முனையில் 24 மாடுகளுடன் மீட்கப்பட்ட கனரக வாகனம்.!
கல்முனை – கடந்த வியாழக்கிழமை (12) இரவு, மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதியில் இருந்து அம்பாறை மாவட்ட நிந்தவூர் பகுதிக்குச் செல்லும் போது, கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவின் புறநகர் பகுதியில் 24 மாடுகளுடன் கனரக வாகனம் கைப்பற்றப்பட்டது.
இந்த சம்பவத்தில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையின் போது, வாகனத்தில் இடவசதிக்கு மேல் மாடுகள் நெருக்கி ஏற்றப்பட்டதாகவும், உரிய அனுமதி இருந்த போதிலும் அதே விதமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வெள்ளிக்கிழமை (13) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. நீதிமன்றம், 24 மாடுகளுடன் மீட்கப்பட்ட கனரக வாகனத்தை பிணையில் செல்ல அனுமதித்தது மற்றும் வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி மறு தவணைக்காக ஒத்திவைத்தது.
மேலும், கைப்பற்றப்பட்ட மாடுகள் அடங்கிய வாகனம் கல்முனை தலைமையக பொலிஸில் தடுத்துவைக்கப்பட்ட நிலையில், இரண்டு மாடுகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடுகள், கல்முனை மாநகர சபையின் பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் அருகில் புதைக்கப்பட்டுள்ளன.
இந்த சோதனை நடவடிக்கை, கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி வருண் ஜயசுந்தர மற்றும் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய, கல்முனை பிராந்திய உதவி பொலிஸ்மா அத்தியட்சகர் எம்.கே. இப்னு அஸாரின் அறிவுறுத்தலின்படி, கல்முனை தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது.